அரசு இசைப் பள்ளியில் சேர  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2017- 18 ஆம் கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2017- 18 ஆம் கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2017- 18 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஜூன் 7-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இங்கு குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம் மற்றும் வயலின் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
நாகசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இசைப் பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ. 400 வழங்கப்படும். இலவச சீருடை, காலணிகள் மற்றும் சைக்கிள் வழங்கப்படும். மேலும், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணச் சலுகை பெறலாம்.
பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 152 மட்டுமே. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, 12 வது வார்டு, எண்.5. ராதாகிருஷ்ணன் தெரு, விளாமுத்தூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9486152007 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com