பெரம்பலூரில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2.50 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூர்- வடக்குமாதவி சாலை, கணபதி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மருதமுத்து (60). இவர், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில், அவரது மனைவியின் சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடந்த 4 ஆம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மருதமுத்து அளித்தப் புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.