பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பரவலாக பெய்தது.
குறிப்பாக, பெரம்பலூர், துறைமங்கலம், குரும்பலூர், செட்டிக்குளம், சத்திரமனை, எசனை, லாடபுரம், மேலப்புலியூர், குன்னம், வேப்பூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால், வரத்து வாய்க்கால்களிலும், சாலையோரங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், விவசாயிகளும், திடீரென பெய்த மழையால் குளிர் காற்று வீசியதை தொடர்ந்து கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.