பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமை செய்த கணவனை மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், அவரது பெற்றோர் உள்பட 3 பேரை தேடிவருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வேள்விமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமார்க்கண்டேயன் மகன் மலர்கண்ணன் (34).
திருச்சி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் அனுஷியா (22). இவர்கள் இருவருக்கும், கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால், அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், மலர்கண்ணன் மற்றும் அவரது பெற்றோர் ஜோதி மார்க்கண்டேயன், ராஜகுமாரி, சகோதரன் அருள்ராஜா ஆகியோர் 4 பேரும், வரதட்சிணையாக ரூ. 1.50 லட்சம் வாங்கிவர வேண்டும் எனக்கூறி தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு, அனுஷியாவை வீட்டை விட்டு விரட்டினராம்.
இதுகுறித்து அனுசியா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்விமலர்கொடி வழக்குப் பதிந்து, மலர்கண்ணணை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, மலர்கண்ணணை 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜோதிமார்க்கண்டேயன் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.