மாணவருக்கு ரூ. 12 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க அஞ்சல் துறைக்கு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள காடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மல்லிகா அர்ஜுனன் (17). இவர், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.
புணே பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்காக 2012-ல் அன்னமங்கலத்தில் உள்ள துணை அஞ்சலகத்தில் பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பம் அனுப்பி வைத்தாராம். ஆனால், நீண்ட நாள்களாகியும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கவில்லையாம்.
இதையறிந்த, மல்லிகா அர்ஜுனன், சம்பந்தப்பட்ட துணை அஞ்சலகத்தை அணுகி கேட்டதற்கு முறையான பதில் அளிக்க மறுத்ததோடு, அவரை மனஉளைச்சல் அடையவைத்தனராம். இதையடுத்து, சேவை குறைப்பாட்டிற்கு காரணமான அன்னமங்கலம் துணை அஞ்சலக அலுவலர், ஸ்ரீரங்கம் கோட்ட கண்காணிப்பாளர், திருச்சி மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆகியோர் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மாணவரின் தந்தை ராமலிங்கம் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கலியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள், மன உளைச்சலுக்குள்ளான மாணவருக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீட்டுத்தொகையும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.