பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8-ம் நாளாக செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். அப்போது தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையின் அச்சாணியான விளங்கும் ஊராட்சிச் செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ம் நாளான செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர்,திருமானூர்,தா.பழூர்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம்,செந்துறை ஆகிய 6 ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்கப்படாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் கிராமப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள், தெருவிளக்குப் பராமரிப்புப் பணிகள் நடைபெறாமல் உள்ளதால், ஊரக வளர்ச்சித் துறையில் நடைபெறும் கட்டடப் பணிகள், சாலைப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளன.
பெரம்பலூரில்... பெரம்பலூர் ஆட்சியரகத்தில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ், சங்க பொறுப்பாளர்கள் இளங்கோவன், பி. தயாளன், அறிவழகன், லட்சுமி, கவுதமன், இமயவரம்பன் மோகன், ராஜபூபதி உள்பட 250- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.