பெரம்பலூர் அருகே, புதன்கிழமை காலை கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் மருதமுத்து. இவர், புதன்கிழமை காலை தனது வயலில் சம்மங்கி பூக்களை அறுவடை செய்துகொண்டிருந்தார். அப்போது, புள்ளி மான் ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்ததை கவனித்த அவர், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான மீட்பு படையினர், கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்டனர். காயத்துடன் இருந்த மானுக்கு எசனை கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வனத்துறை அலுவலர் ரவீந்திரனிடம் ஒப்படைத்தனர்.