பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வனப்பகுதியிலிருந்து குடிநீர் தேடி வந்த 2 மான்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.
வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டமாந்துறை வனப்பகுதியிலிருந்து, 2 வயதுள்ள ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்தபோது, அன்னமங்கலம் கிராமம், தனப்பிரகாசம் நகர் அருகேயுள்ள நீரில்லா விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.
இதேபோல, வெண்பாவூர் வனப்பகுதியிலிருந்து 2 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீருக்காக வியாழக்கிழமை குடியிருப்புப் பகுதிக்கு வந்தது. நெய்குப்பை கிராமம் அருகே வந்தபோது, அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது. இச்சம்பவங்கள் குறித்து தகவலறிந்த வனக்காப்பாளர்கள் குணசேகரன், பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடங்களுக்குச் சென்று உயிரிழந்த மான்களை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர்.
மின்னல் பாய்ந்து பசுமாடு சாவு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி, கள்ளப்பட்டி, வேப்படி, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, இடி தாக்கியதில் கள்ளப்பட்டியை சேர்ந்த மருதை என்பவரின் பசுமாடு உயிரிழந்தது.