எஸ்.எஸ்.எல்.சி அரசுப் பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 94.98 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 17-வது இடத்தைப் பெற்றுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி அரசுப் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில், 5,174 மாணவர்கள், 4,475 மாணவிகள் என மொத்தம் 9,649 பேர் எழுதினர். இதில், 4,888 மாணவர்கள், 4,277 மாணவிகள் என மொத்தம் 9,165 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் 94.98 சதவீதம் தேர்ச்சிபெற்று மாநில அளவில் 17-வது இடத்தைப் பெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 78 அரசுப் பள்ளிகளில் 5 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 15 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அசூர், சத்திரமனை, கல்பாடி, ஒதியம், வடக்குமாதவி, ஜமீன்பேரையூர், ஆதனூர், எழுமூர், கூடலூர், செங்குணம், வரகூர், பெரியம்மாபாளையம், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பொம்மனப்பாடி, ஈச்சம்பட்டி, பாடலூர் உள்ளிட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளும், வேப்பந்தட்டை, நெற்குணம், வெங்கலம், கை.களத்தூர், தேனூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 20 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். இந்நிகழ்ச்சியின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.