குடிநீர் கோரி குரும்பலூரில் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குரும்பலூரில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வாடகை வாகனங்கள் மூலமாகவும், வயல் பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு சென்றும் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், குரும்பலூரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாலும், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், பெரம்பலூர்- துறையூர் சாலையில் குரும்பலூர் பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், குரும்பலூர் பேரூராட்சி செயலர் அலுவலர் திருமூர்த்தி மற்றும் பெரம்பலூர் போலீஸார் அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com