பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை சார்பில், பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ், மானிய விலையில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் அண்மையில் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தில் பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ், 2016-17 ஆம் ஆண்டிற்கான மானிய விலையில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அம்மாபாளையம், மேலப்புலியூர், லாடபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு தலா ரூ. 19,600 மதிப்பில் மானிய விலையில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்கிய வேளாண் உதவி இயக்குநர் கீதா பேசியது:
வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நுண்ணுயிர் பாசன முறையின் ஓர் அங்கமாக திகழும் தெளிப்பு நீர் பாசனம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாசனம் மூலம் விவசாயி 25- 30 சதவீதம் வரை பாசன நீரை சேமிக்க முடியும்.
களைகளை சுலபமாக கட்டுப்படுத்தவும் முடியும். பயிர்களுக்கு தேவையான மைக்ரோ கிளைமேட் கிடைக்கிறது. பெரம்பலூர் வட்டாரத்தில் வேளாண்துறை மூலம் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகளிடம் நில ஆவணங்கள் பெறப்பட்டு, தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேளாண் உதவி அலுவலர்களை அணுகலாம் என்றார் அவர்.
இந் நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர்கள் பிரேமாவதி, தனபால், இளநிலை பொறியாளர் நாகராஜன், உதவி வேளாண் அலுவலர் இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.