அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சியை முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி தொடக்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் படைப்புகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான
குறுவளமைய அறிவியல் கண்காட்சியை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடக்கி வைத்து பார்வையிட்டார் முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி.
கண்காட்சியில், நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு என்னும் தலைப்பில் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கழிவு மேலாண்மை மற்றும் நீர்பாசன பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் சார்ந்த 40 படைப்புகளை, 17 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 80 மாணவ மாணவிகளால் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியில், தொடக்க நிலைப்பள்ளி அளவில் பெரம்பலூர் (மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாகவும், உயர் தொடக்க நிலைப்பள்ளி அளவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி சிறந்த பள்ளியாகவும் தேர்வு செய்யப்பட்டது.
இதில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சுந்தரராசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜயங்கொண்டத்தில்...: அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டார வளமையத்துக்குள்பட்ட 14 குறுவள மையங்களில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜயங்கொண்டம் வட்டார வள மையத்துக்குள்பட்ட ஜயங்கொண்டம் வடக்கு, ஜயங்கொண்டம் தெற்கு, கழுவந்தோண்டி, கங்கைகொண்டசொழபுரம், உடையார்பாளையம், இரவாங்குடி, கல்லாத்தூர், சலுப்பை, மீன்சுருட்டி, உட்கோட்டை, மேலணிக்குழி, வானதிரையான்பட்டிணம், தத்தனூர், தத்தனூர் கைக்களதெரு ஆகிய 14 குறுவள மையங்களில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி தொடக்கி வைத்தார். இதில் மாணவர்களிண் படைப்பாற்றல் திறன், கற்பனை, அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடுகள், படைப்புகளின் மூலம் சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்திகள், ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு, வள மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, திடக்கழிவு மேலாண்மை, நீர்பாசன அமைப்பு, கணித மாதிரியக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
கண்காட்சியில் ஜயங்கொண்டம் வட்டார வளமையத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 137 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கண்காட்சியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அனந்தநாராயணன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அசோகன், இளங்கோவன் ஆகியோர் ஆய்வு சொய்தனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் இளவரசி, வெங்கடேசன், அன்பரசன், அற்புதசாமி, அந்தோணி லூர்து சேவியர், பாலமுருகன், தாமோதரன், செந்தில்குமார், சுதா, பாலா ஆகியோர் செய்திருந்தனர்.