பெரம்பலூர் மாவட்டம், டி,களத்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி. களத்தூர் கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம்.
இதனால் பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் தட்டுப்பாடின்றி முறையாக விநியோகம் செய்யக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், டி.களத்தூர்- தேனூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அளித்த உறுதியையடுத்து மறியலை கைவிட்டுச் சென்றனர்.
இதனால், அந்த வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.