பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், படித்த மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக். 14) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள எஸ்.எஸ். டெக்னோவேஷன், வேவ்ஸ் குரூப், மகேந்திரா டீலர் ஷிப், ஐ.சி.ஐ.சி.ஐ அகாதெமி, எம்.ஆர்.எப். லிமிடெட், கிளாசிக் போலோ, டி.வி.எஸ் டெய்னிங், எல்.ஐ.சி நிறுவனம், க்ளோ டெக்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதற்கான நேர்காணலில் 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்த 18 முதல் 35 வரையுள்ளஆண், பெண்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல், நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.