சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சாத்தனூர் கல்மரப் பூங்காவை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாத்தனூர் கல்மர பூங்கா மற்றும் அதனருகே கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை, அருங்காட்சியகத்தை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் பேசியது:
சாத்தனூர் பகுதியில் உள்ள கல்மரப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.மேலும், ரூ. 9.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சாத்தனூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அரியவகை பொருள்களை காட்சிப்படுத்த அருங்காட்சியக வளாகத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
வயல்களில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் டைனோசர் முட்டை வடிவிலான கற்கள், கல் நத்தை வடிவிலான கற்கள் உள்ளிட்ட தொன்மை பொருள்களை அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க சாத்தனூர் கல்மரப் பூங்காவை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பார்த்து செல்லும் வகையில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் சாந்தா.
ஆய்வின்போது ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், சுற்றுலா உதவி அலுவலர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.