பெரம்பலூரில், இந்திய ரிசர்வ் வங்கி (சென்னை) சார்பில் நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை தலைமை பொது மேலாளர் கேசவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் தொடக்கி வைத்தார்.
இதில், நபார்டு வங்கி பொது மேலாளர் எம். கெஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் முருகன், ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர்கள் தியாகராஜன், சரவணன் ஆகியோர் வங்கி சார்ந்த பரிமாற்றங்கள், கடன் வசதி, தனியார் நிறுவனங்களிடம் கடன் மற்றும் பண பரிமாற்றங்களில் செயல்படும் முறைகள் குறித்து விளக்கினர்.
கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில், மகளிர் சுய உதவி குழு கைவினை பொருள்கள் மற்றும் இதர பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், சுய உதவி குழுக்கள், வங்கி பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி சென்னை தலைமை பொது மேலாளர் கேசவன் தலைமையிலான குழுவினர் நாட்டார்மங்கலம், ஈச்சங்காடு, கூத்தனூர் ஆகிய பகுதிகளில் 864 ஏக்கரில் நபார்டு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நீர் செறிவு திட்டப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார் கூறியது: நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் 864 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு, ரூ. 38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக ரூ. 15 லட்சம் நிதி பெறப்பட்டு தடுப்பணை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் வறட்சிப் பகுதிகள் பசுமையாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.