கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, எறையூர் சர்க்கரை ஆலை எதிரே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது. விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ. 262 கோடி கரும்புக்கான நிலுவைத் தொகையை, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ. 1,170 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அக். 11 ஆம் தேதி சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத் துறை சர்க்கரை ஆலை எதிரே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அரை நிர்வாணத்தில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணைத் தலைவர் முருகானந்தம், துணைச் செயலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச்செயலர் ஏ.கே. ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கினார். சங்க நிர்வாகிகள் ஜி. வரதராஜன், பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.