பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மின் தடையை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
குன்னம் அருகேயுள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாள்களாக ஓலைப்பாடி கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை மின்சாரமின்றி கொண்டாடினராம். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமுற்ற சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலர்களை கண்டித்தும், உடனடியாக மின் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்ரமணியன் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் திட்டக்குடி- வேப்பூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.