பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திபெத் எல்லையில் கடந்த 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையின் போது எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்தவகையில், நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில், கூடுதல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.
அரியலூரில்....: தமிழக காவல் துறையில் பணியின் போது, வீரமரணமடைந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ், ஜயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி தலைமையில் 63 குண்டுகள் முழங்க அணிவகுப்பு நடத்தப்பட்டு, நினைவு ஸ்தூபியில் அனைத்து காவல் துறை அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தனர்.