தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முகாம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் வே. சாந்தா பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. செப். 27 ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் முகாமுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இம்முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த தகுதியுடைய இளைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.