பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், சிறப்பு புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் டிச. 21 ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு கோரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, 2011 முதல் 2015 வரையிலான காலத்தில் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகையின் கீழ், டிச. 21 ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தின் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அலுவலக வேலை நாள்களில் நேரில் சென்றும் புதுப்பித்து பயனடையலாம்.