நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் அரங்க. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநில பொதுப் பட்டியலில் இணைக்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும். மேலும், அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம், மாநிலச் செயலர் வீர. செங்கோலன், மண்டல அமைப்புச் செயலர் இரா. கிட்டு, மாநில துணைச் செயலர்கள் கா.அ. தமிழ்குமரன், வழக்குரைஞர் இரா. சீனிவாசராவ், பெரியசாமி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு. உதயகுமார், மாவட்ட பொருளாளர் அ. கலையரசன், மாவட்ட துணை அமைப்பாளர் க. அய்யம்பெருமாள், பெரம்பலூர் ஒன்றியச் செயலர்கள் சி. பாஸ்கர், எம்.பி. மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட துணை அமைப்பாளர் பொன். சங்கர் நன்றி கூறினார்.