பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து, ரூ. 85 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள வெங்கடாசலபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது சகோதரர் நல்லுசாமி (43). இருவரும், வீட்டின் ஒருபகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனராம். இந்த நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் கதவை வெளிப்புறத்தில் பூட்டிவிட்டு மளிகை கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த ரூ. 85 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரீ சார்ச் அட்டைகள், மளிகை பொருள்கள், இனிப்பு வகைகள் என மொத்தம் ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச்சென்றுவிட்டனராம்.இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே கடையில் கொள்ளை சம்பவம் நடந்து, இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலையில், மீண்டும் இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.