பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், 8 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிவாயு விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் பி. ஜெய்சங்கர்.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கும் வகையில், எரிவாயு முகவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம், ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில், பிரதமரின் உஜ்வாலா யோஜானா எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக நாடு முழுவதும் 5 கோடி பெண்களுக்கு 3 ஆண்டுகளில் இலவச எரிவாயு உருளை இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம், மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் 2020-க்குள் 8 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு முன் பணம் இன்றி அளிக்கப்படும் ஒவ்வொரு எரிவாயு இணைப்புக்கும், மத்திய அரசால் ரூ. 1, 600 மானியம் அளிக்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 3.6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
எரிவாயு நிறுவன முகவர்கள் மூலம், கிராமங்களில் ஏப். 20 ஆம் தேதி விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதில், வீடு, வீடுடாக சென்று எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளை கண்டறிந்து, இலவச எரிவாயு இணைப்பு குறித்தும், பெண்களின் உடல் நலன், பாதுகாப்பு, வேலைப்பளுவை குறைத்தல், சமையல் நேரம் குறைப்பு, சமையல் எரிவாயு வழங்குவதன் மூலம் ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தல் குறித்து விளக்கிக்கூறி, எரிவாயு இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர் என்றார் அவர்.