பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை பராமரிப்பு மையங்கள் நடத்துவதற்கு அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் இளைஞர் நீதி சட்டம், விதிகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தர வசதிகளுடன் கூடிய குழந்தை பராமரிப்பு மையங்கள் நடத்துவதற்கு அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டம், குழந்தை நலக்குழு, இளைஞர் நீதிக் குழுமம் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
18 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தர வசதிகளுடன் கூடிய குழந்தை பராமரிப்பு மையங்கள் நடத்தலாம். இதற்கான விண்ணப்பம், கூடுதல் விரங்களுக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டம், எம்.எம். பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம்.