பெரம்பலூரில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையில் உள்ள சமத்துவபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதற்கு அருகில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் விளையாட்டுத் திடலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதி இந்த பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்காக நகராட்சி சார்பில் பூமி பூஜை போடப்பட்டிருந்த நிலையில், சமத்துவபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்கள் சுற்றுச்சூழல், சுகாதாரக் கேடு ஏற்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைக்கிடங்கு அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது.
இதனால்ஆத்திரமடைந்த சமத்துவபுரம் பகுதி மக்கள் பெரம்பலூர்- துறையூர் சாலையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியல் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற நகராட்சி ஆணையர் வினோத், காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவீந்திரன் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பொதுமக்கள் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.