சக மனிதனை நேசிக்கும் பண்பு மேலோங்க வேண்டும் என்றார் அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன்.
பெரம்பலூரில், பதியம் இலக்கியச் சங்கமத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சரங்கத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: உதயமாகும் புத்தாண்டில் இன்றைய நம் சமூகத்துக்கு உடனடித் தேவை மனமாற்றமே. சக மனிதனை நேசிக்கும் பண்பு மேலோங்க வேண்டும். பேரழிவுகள் நிகழும் காலங்களில் செய்யும் செயல்களை, சாதாரண காலங்களிலும் செய்ய வேண்டும். இளைய மனங்களில் மனிதன் எவ்வளவு உயர்வானவன் என்பது விதைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, திருச்சி அழ. கவுண்டன்பட்டி அரசு மேநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா. சரவணவேல், இன்றைய சமூக மாற்றங்கள் குறித்து விளக்கினார். இரூர் அரசு மேநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ந. மலர்க்கொடி முன்னிலையில், இன்றைய உடனடித் தேவை மனித உரிமை என்னும் தலைப்பில், கவிஞர் பிரபாத் கலாம், இளைஞர் எழுச்சி என்னும் தலைப்பில் வெண்மணி வரதராஜன், மாணவர்களுக்கான நல்ல ஆசிரியர் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வாளர் மதன்ராஜ், நட்பு என்னும் தலைப்பில் கவிஞர் செந்தில்குமரன், அன்பு என்னும் தலைப்பில் புவனேஸ்வரி, இயற்கை வேளாண்மை எனும் தலைப்பில் கதிர்மதி, தாய்மொழி எனும் தலைப்பில் ஹரிஹரன், கல்வி என்னும் தலைப்பில் பேராசிரியர் குமரவேல், இயற்கை மருத்துவம் எனும் தலைப்பில் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் செல்வம், செ. ராஜா, க. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர் பிரசாந்த் வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.