அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பெரம்பலூரில் இந்தியத் தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழப்புலியூர், சிறுகுடல் சிலோன் காலனி பகுதிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை உள்பிரிவு செய்துத் தர வேண்டும். கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பேருந்து நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
கீழப்புலியூரில் இயங்கி வரும் மதுபானக்கடையை மாற்ற வேண்டும். தனி நூலகம், விளையாட்டுத் திடல், உதவிசாதனங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, இந்தியத் தொழிலாளர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பி.ஆர். ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் கே.ஆர். சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வீர. செங்கோலன், இரா. ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.