அரசு பொதுத்தேர்வில், பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் எந வலியுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து, பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது: மார்ச் மாதம் முதல் 10 ஆம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதையொட்டி, தேர்வுகளை சிறப்பாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் மார்ச் 1 முதல் ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வில் 4,403 மாணவர்களும், 4,528 மாணவிகளும் என மொத்தம் 70 பள்ளிகளைச் சேர்ந்த 8,931 நபர்கள் 27 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
மார்ச் 7 முதல் ஏப். 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ள மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் 4,284 மாணவர்களும், 4,318 மாணவிகளும் என மொத்தம் 72 பள்ளிகளைச் சேர்ந்த 8,602 நபர்கள் 27 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
மார்ச் 16 முதல் ஏப். 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 4,947 மாணவர்களும், 4,234 மாணவிகளும் என மொத்தம் 135 பள்ளிகளைச் சேர்ந்த 9,181 நபர்கள் 37 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் வசதிக்காக, தேவையான அளவில் தேர்வு மையங்களுக்கு சென்று வர பேருந்துகள் இயக்குவதற்கும், தேர்வு நடைபெறும்போது மின் தடை நிகழாமல் இருப்பதற்கும், தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. எனவே, அரசு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் படிப்பில் முழு கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சி என்ற நிலையை அடைய, அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், கூடுதல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் பிருத்திவிராஜன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.