பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் ஒன்றியம், ரெங்கநாதபுரம் கிராமத்தில் அதிக அளவிலான கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் நோய்வாய்ப்பட்டால், வேலூர் அல்லது பெரம்பலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து ரெங்கநாதபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பெரம்பலூர் எம்.பி., ஆர்.பி. மருதராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரெங்கநாதபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ரெங்கநாதபுரத்தில் நடைபெற்ற கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, எம்.பி., ஆர்.பி. மருதராஜா தலைமை வகித்தார். சிதம்பரம் தொகுதி எம்.பி., மா. சந்திரகாசி, பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசினார். இதில், அதிமுக நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, கட்சி நிர்வாகி பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் செங்கோட்டையன் வரவேற்றார். கால்நடை உதவி மருத்துவர் ஜவஹர் நன்றி கூறினார்.