கவிஞர் வைரமுத்து பிரச்னையில் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருப்பதே கண்ணியம் என்று மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் கூறினார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கவிஞர் வைரமுத்து எனது நல்ல நண்பர். அவர் நாத்திகர் என்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தமிழால் நாங்கள் நட்பு கொண்டுள்ளோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி அவர் சில கருத்துகளைப் பேசியது கண்டிக்கத்தக்கது. வருத்தம் தெரிவித்த பின்பு, இப்பிரச்னையை மேற்கொண்டு பேசாமல் இருப்பது கண்ணியம் என்றார் அவர்.
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்: ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்துகள் கண்டனத்துக்குரியது. அவரது கட்டுரைக்கு மாற்றாக தகுதியுள்ள ஒருவரின் சீரிய கட்டுரையை வெளியிட வேண்டும் என வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் கேட்டுக்கொண்டுள்ளார். இதே கருத்தை மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகளும் வலியுறுத்தியுள்ளார்.