பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், ஜன. 19 முதல் ஆண்களுக்கான இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மைய இயக்குநர் ஜெ. அகல்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயிற்சி பெற 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், எழுத, படிக்கத் தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறும் பயிற்சியானது காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும், ஒட்டுநர் உரிமமும் வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மதனகேபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜன. 18 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை 04328 277896 என்னும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.