தமிழகத்தில் காலியாக உள்ள 884 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மகேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை, அண்மையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அவரிடம் அளித்த மனு:
தமிழக அளவில் 3,201 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தற்போது 884 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தலைமை ஆசிரியர் காலியிடம் அரசுப் பள்ளிகளுக்கான தேர்ச்சி விகிதத்தைப் பாதிப்பதோடு, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை வெகுவாகப் பாதிக்கும்.
எனவே, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பதவி உயர்வு குறித்து தேங்கி நிற்கும் வழக்கை விரைந்து முடித்து, தமிழக அளவில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில அமைப்பு செயலர் பீட்டர் ராஜா, தமிழக தமிழாசிரியர் கழக பொதுச் செயலர் நாகேந்திரன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பொன். செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.