பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் ஜன. 20 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, பெரம்பலூர் வட்டம், அயிலூர் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ச. மனோகரன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கு. பத்மாவதி தலைமையிலும், குன்னம் வட்டம், வடக்கலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எல். இருதயமேரி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், புஜங்கராயநல்லூர் கிராமத்தில் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் த. பாண்டித்துரை தலைமையிலும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஜன. 20 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே, மேற்கண்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என்றார் ஆட்சியர்.