பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 25-ல் விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர். வே. எ. நேதாஜி மாரியப்பன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் பயிற்சியில், தேனீக்களின் வகைகள், இனங்கள், வளர்க்கும் முறை, தேனீ வளர்ப்பில் பயன்படும் சாதனங்கள், தேனீக்களுக்குத் தேவைப்படும் மதுரம் மற்றும் மகரந்தம் தரும் பயிர்கள், தேனீ வளர்ப்பில் வரும் இடர்பாடுகள், தேனீக்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், அதன் மேலாண்மை முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள், தேன் எடுக்கும் காலம் மற்றும் முறை, தேனீ வளர்ப்பின் நன்மைகள், தேனின் மருத்துவ குணங்கள், தேனில் அடங்கியுள்ள சத்துகள் ஆகியவை குறித்து விரிவான விளக்கங்களுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். எனவே, இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது பெயர் மற்றும் முகவரியை நேரில் அல்லது 97876-20754 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்.