பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறின்றி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தத் தடையில்லை என்னும் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஊழியர் மற்றும் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை தடுத்து, மாநில நிர்வாகிகளைக் கைது செய்துள்ள காவல்துறையை கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த மறுக்கும் மாவட்ட ஆட்சியர் கா.சு. கந்தசாமியை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சா. இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி. தயாளன், சங்க நிர்வாகிகள் ஸ்டீபன் அந்தோணிசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர். மகளிர் துணைக் குழு நிர்வாகி லதா நன்றி கூறினார்.