பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே புதன்கிழமை வேன் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் மகன் செல்வக்குமார் (38), இவரது மனைவி நிவேதிதா (22). இவர்கள், திருச்சியில் இருந்து காரில் சென்னை நோக்கி புதன்கிழமை சென்றனர். காரை, தென்காசி பிரதான சாலையைச் சேர்ந்த சாமி மகன் சுரேஷ் (31) ஓட்டிச்சென்றார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு துணை மின் நிலையம் அருகே புதன்கிழமை மாலை கார் சென்றது.
அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி தக்காளி ஏற்றிச்சென்ற வேன் திடீர் பிரேக் போட்டதால், அதன் மீது கார் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த செல்வக்குமாரும், கார் ஓட்டுநர் சுரேஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் காயமடைந்த நிவேதிதாவை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.