பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வேப்படிபாலக்காடு - பூலாம்பாடி சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வந்தது.
இந்தக் கடை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடையை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்றி பூலாம்பாடி- பெரியம்மாபாளையம் செல்லும் சாலையில் செவ்வாய்க்கிழமை திறந்தனர்.
இதையறிந்த பெரியம்மாபாளையம் கிராம மக்கள் மதுக்கடையை அகற்றக் கோரி சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தகவலறிந்த வேப்பந்தட்டை வட்டாட்சியர் பாரதி வளவன் மற்றும் அரும்பாவூர் போலீஸார் அங்கு சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், பூலாம்பாடி- பெரியம்மாபாளையம் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.