பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 70 மேல்நிலைப் பள்ளிகளில் 4 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 24 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசுப் பள்ளிகளில் லப்பைக்குடிகாடு (பெண்கள்), எளம்பலூர், கவுள்பாளையம் மற்றும் கிழுமத்தூர் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தார். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.