பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச் சாவடி பணியாளர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநரின் வாகனம் இலவசமாக செல்ல அனுமதி மறுத்ததால், பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநநான குமரகுருபரன், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு தனது வாகனத்தில் சென்றார். பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் சென்றபோது, அங்கிருந்த பணியாளர்கள் அவரிடம் சுங்கச்சாவடி கட்டணம் கேட்டனராம்.
அதற்கு அவர் தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிய அவர், தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த பணியாளர்கள், அவரை நீண்டநேரம் சாலையில் காத்திருக்க வைத்தனராம். பின்னர், சுங்கச்சாவடி மேலாளரிடம் அனுமதி பெற்ற பிறகே அவரது வாகனத்துக்கு இலவசமாக செல்ல அனுமதித்தனராம்.
தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வேப்பந்தட்டை துணை வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் திருமாந்துறை சுங்கச்சாவடிக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த பணியாளர்களிடம் விவரம் கேட்டதற்கு, வருவாய்த் துறையினரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த துணை வட்டாட்சியர் சரவணன் சுங்கச்சாவடி பணியாளரை தாக்கியதாகத் தெரிகிறது. இதையறிந்த சுங்கச்சாவடி பணியாளர்கள், வருவாய்த் துறையினரை கண்டித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு சென்ற மங்கலமேடு போலீஸார் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, சமாதானப்படுத்தி வருவாய்த் துறையினரை அங்கிருந்து அனுப்பினர்.
சுங்கச்சாவடி பணியாளர்களின் இந்தப் போராட்டத்தால், அந்த வழியே சென்ற வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எவ்வித கட்டணமும் செலுத்தாமல் சென்றன.