பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடியில் மே 29 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்பாக, அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடுள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி பேசியது:
ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்களது பகுதி வட்டாட்சியரிடம் பெயரை பதிய வேண்டும். உடல்தகுதி குறித்து உரிய மருத்துவரிடம் சான்று பெற்று சமர்பித்த பின்னரே, அவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். காளைகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்படவில்லை என கால்நடைத் துறையினரால் சான்றளிக்க வேண்டும்.
காளைக்கு ஏதேனும் நோய்கள், காயங்கள் இருந்தால் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பிரதான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். பார்வையாளர்கள் பாதிக்கப்படாத வகையில், உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரி ஏற்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு நல்லமுறையில் நடைபெற விழாக் குழுவினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே, ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் அனைவரும் அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி, சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் (பொ) செல்வராஜ், அலுவலக மேலாளர் மகாராஜன், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் அரவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.