பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் செயலைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் பி. தயாளன் வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் குமரிஆனந்தன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குநர் சு. தேவநாதனை, தொலைபேசி மூலம் அண்மையில் தொடர்புகொண்டு தரக்குறைவாக பேசியதோடு, கட்சித் தொண்டர்களுடன் மகளிர் திட்ட அலுவலகத்துக்கு சென்று அலுவலக ஊழியர்களை திட்டிய பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.
துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த போலீஸாரைக் கண்டிப்பது, இப் பிரச்னையில் தமிழக அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவர் சிவகுமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு, மாவட்ட இணைச் செயலர்கள் சேவு, கெளதமன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி நன்றி கூறினார்.