ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, அக்கட்சியின் மாவட்ட செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற மறியலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே நிரந்தரமாக மூட வேண்டும். அமைதிப் பேரணியில் பங்கேற்ற பொதுமக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த தூத்துக்குடி ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பிரதமர் ஆகியோரது உருவப் படங்களை எரித்த மாவட்ட துணைச் செயலர் ந. கிருஷ்ணகுமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு. உதயகுமார், மாநில செயலர் வீர. செங்கோலன், மாநில துணைச் செயலர் பெரியசாமி, ஒன்றியச் செயலர்கள் எம்.பி. மனோகரன், மா. இடிமுழக்கம், எ. வெற்றியழகன், ஆ. நந்தன், நகர செயலர் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்ட 21 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். மறியலால் பேருந்து நிலைய சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.