தமிழக அரசின் 6 ஆம் வகுப்பு, 2 ஆம் பருவ ஆங்கில பாடப் புத்தக்கத்தில், தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற பெரம்பலூர் அரசுப் பள்ளி மாணவியின் சாதனை குறித்த விவரங்கள் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், உசிலம்பட்டி அருகேள்ள மேலதிருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா- சந்தனம் தம்பதியின் மகள் ராஜமாணிக்கம் (17). மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், டி.ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது தடகளம், கால்பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் பங்கேற்றார். போதிய பயிற்சி வேண்டி, 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர், பெரம்பலூரில் உள்ள அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். நிகழாண்டில் பிளஸ்-2 படித்து வரும் ராஜமாணிக்கம், கடந்த ஜனவரி மாதம் கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான 19 வயதுக்குள்பட்ட தேசிய டேக்வாண்டோ போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்று 40 முதல் 42 கிலோ எடை பிரிவில் விளையாடி 3 ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 6 ஆம் வகுப்பு 2 ஆம் பருவ ஆங்கில பாடப்புத்தகத்தின் 109 ஆவது பக்கத்தில் தேசிய டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜமாணிக்கம் இடம்பெற்றுள்ளார். இம்மாணவி வரும் 16 ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து பாராட்டு பெற உள்ளதையடுத்து, மாணவியை பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா, டேக்குவாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் ஆகியோர் பாராட்டினர்.