டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், நகராட்சிக்குள்பட்ட 4 ஆவது வார்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகள் குறித்து சனிக்கிழமை
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
ஆய்வில், பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 4 ஆவது வார்டில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவை முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை 3 நாள்களுக்கு ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு கழுவி உலரவைத்து தண்ணீர் பிடிக்க வேண்டும்.
பிளிச்சிங் பவுடர் கொண்டு மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்வதால், தொட்டிகளில் உள்ள பாசிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொசுவின் முட்டைகள் அழிக்கப்படும்.
பொதுமக்கள் இதைக் கருத்தில் கொண்டு, தங்களது வீடு மற்றும் சுற்றப்புறங்களில் உள்ள பிளாஸ்டிக், உடைந்த மண்பானைகள் மற்றும் பயன்படுத்தாத டயர்கள் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்காமல் அவற்றை அகற்றி, சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.