பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள் நியமித்து, தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை ஊராட்சியில் 30 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, போதிய மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதகர், செவிலியர்கள் இல்லாததால் காரை உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மருத்துவ வசதி பெற முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த மருத்துவமனை பாடாலூருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை கிகாமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், காரை மருத்துவமனையை தரம் உயர்த்தி அதே இடத்தில் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய செவிலியர்கள், ஸ்கேன் பரிசோதகர் ஆகியோர் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மறியலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தகவலறிந்த சுகாதாரத் துறையினரும், காவல் துறையினரும் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டு, சுமூக உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மறியலைக் கைவிடுவதாக தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், 2 வாரங்களில் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலைக் கைவிட்டுச் சென்றனர்.
கொளக்காநத்தம்- அரியலூர் செல்லும் சாலையில் நடைபெற்ற இந்த சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், பணிக்கு சென்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.