பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார திட்ட குழுவினரின் ஆய்வுப் பணி திங்கள்கிழமை நிறைவடைந்தது.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவிகள் முறையாக செலவழிக்கப்பட்டுள்ளதா, மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்கள் மக்களிடம் முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய சுகாதார திட்ட மத்தியக் குழுவினர் செப்.6ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தந்தனர்.
சுகாதாரத்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட குழுவினர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனையில் 5 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளின் போது கண்டறிந்த விவரங்கள், சுகாதார திட்டப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளை ஆய்வறிக்கையாக ஆட்சியரிடம் குழுவினர் வழங்கினர்.