பெரம்பலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.
பாலக்கரையில் தொடங்கிய பேரணியானது, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவுப் பொருள்கள் கண்காட்சியை ஆட்சியர் வே.சாந்தா தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.