பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை இரவு காயமடைந்தோரை மீட்ட முதியவர் சுமை ஆட்டோ மோதி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூரை சேர்ந்தவர் பெருமாள் மகன் ரெங்கநாதன் (43). இவர், திங்கள்கிழமை இரவு பெரம்பலூரிலிருந்து டி.களத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி திருச்சி மாவட்டம், ஊட்டத்தூரை சேர்ந்த செல்வம் மகன் ஜீவா (30) வந்த பைக் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதைப் பார்த்த சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் (60), காயமடைந்த நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, பெரம்பலூரிலிருந்து முசிறி நோக்கி சென்ற சுமை ஆட்டோ மேற்கண்ட 3 பேர் மீதும் மோதியது. இதில் காயமடைந்த 3 பேரும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் சுப்ரமணியன் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநர் முசிறியை சேர்ந்த செந்திலை (30) கைது செய்து விசாரிக்கின்றனர்.