ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பா.ஜ.க அரசு ஊழலில் ஈடுபட்டதாகக் கூறியும், அதைக் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் எம். கிரிஸ்டோபர் திலக் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் சிவாஜி மூக்கன், ஆசைத்தம்பி, தங்கவேல், மதனகோபால், அருணாசலம், ராமசாமி, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் எஸ். சுஜாதா, வழக்குரைஞர் பிரிவு மாநிலத் தலைவர் கே. சந்திரமோகன் ஆகியோர், ஊழலில் ஈடுபட்டதாக மத்திய அரசைக் கண்டித்தும், அரசின் செயல்பாட்டை கண்டித்தும் பேசினர். தொடர்ந்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சித்தர், ரஞ்சித், இந்திராணி, பூபதி, காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் தங்க. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.